சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
7.041
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
முது வாய் ஓரி கதற, பண் - கொல்லிக்கௌவாணம் (திருக்கச்சூர் ஆலக்கோயில் தினம்விருந்திட்டநாதர் கன்னியுமையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=GAXwrWFKRSE |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.041  
முது வாய் ஓரி கதற,
பண் - கொல்லிக்கௌவாணம் (திருத்தலம் திருக்கச்சூர் ஆலக்கோயில் ; (திருத்தலம் அருள்தரு கன்னியுமையம்மை உடனுறை அருள்மிகு தினம்விருந்திட்டநாதர் திருவடிகள் போற்றி )
தொண்டைநாட்டுத் தலங்களை வழிபட விரும்பிய சுந்தரர், திருநாவலூரினின்றும் புறப்பட்டுத் திருக்கழுக்குன்றத்தை அடைந்து வணங்கித் திருக்கச்சூர் ஆலக்கோயிலைப் பணிந்து போற்றிக் கோயிற் புறத்தே வந்தார். அப்பொழுது வெயில் வெம்மை மிக்க நண்பகற் பொழுதாகியும் அவருக்கு அமுது சமைத்தளிக்கும் பரிசனங்கள் அங்கு வந்து சேரவில்லை. அடியார் பசித்திருக்கப் பொறாத இறைவன், மறையவர் வடிவுடன் வந்து, வன்றொண்டரை நோக்கி, நீர் பசியால் மிகவும் வாட்டமடைந்துள்ளீர். யான் சிறிது நேரத்தில் இங்குள்ள வீடுகளில் இரந்து உணவு கொண்டுவருமளவும் இங்கேயே இருப்பீராக என்று கூறிச்சென்று, அருகில் உள்ள வீடுகளில் கறியும் சோறும் இரந்து பெற்று வந்து, நம்பியாரூரர்க்கு வழங்கி, இதனை உண்டு பசிதீரும் என்று உபசரித்தார். சுந்தரர், அந்தணர் தந்த அமுதை அடியார்களோடு உண்டு மகிழ்ந்தார். மறையவர் விரைவில் மறைந்தார். அந்நிலையில் வன்றொண்டர் தமக்கு உணவு இரந்து பெற்று உண்பித்தவர் இறைவனே யெனத் துணிந்து, இறைவன் பெருங்கருணையை வியந்து ஆலக்கோயில் பெருமானை, முதுவாயோரி என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார்.
முது வாய் ஓரி கதற, முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே! மது வார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள் தன் மணவாளா! கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே? அதுவே ஆம் ஆறு இதுவோ? கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!. | [1] |
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து, கழலும் சிலம்பும் கலிக்க, பலிக்கு என்று உச்சம் போதா ஊர் ஊர் திரியக் கண்டால் அடியார் உருகாரே? இச்சை அறியோம்; எங்கள் பெருமான்! ஏழ் ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய்! அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே!. | [2] |
சாலக் கோயில் உள நின் கோயில்; அவை என் தலை மேல் கொண்டாடி மாலைத் தீர்ந்தேன்; வினையும் துரந்தேன்-வானோர் அறியா நெறியானே! கோலக் கோயில் குறையாக் கோயில் குளிர் பூங் கச்சூர் வடபாலை ஆலக்கோயில், கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே!. | [3] |
விடையும் கொடியும் சடையும் உடையாய்! மின் நேர் உருவத்து ஒளியானே! கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னி மாடம் கலந்து, எங்கும் புடையும் பொழிலும் புனலும் தழுவி, பூமேல்-திருமாமகள் புல்கி, அடையும் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!. | [4] |
மேலை விதியே! வினையின் பயனே! விரவார் புரம் மூன்று எரி செய்தாய்! காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய்! கறைக் கண்டா! மாலை மதியே! மலை மேல் மருந்தே! மறவேன், அடியேன்; வயல் சூழ்ந்த ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!. | [5] |
பிறவாய்; இறவாய்; பேணாய், மூவாய்; பெற்றம் ஏறிப் பேய் சூழ்தல் துறவாய்; மறவாய், சுடுகாடு என்றும் இடமாக் கொண்டு நடம் ஆடி; ஒறுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் உருகாரே? அறவே ஒழியாய் கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே! . | [6] |
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வோனே! மெய்யே! எங்கள் பெருமான்! உன்னை நினைவார் அவரை நினை கண்டாய்! மை ஆர் தடங்கண் மங்கை பங்கா! கங்கு ஆர் மதியம் சடை வைத்த ஐயா! செய்யாய்! வெளியாய்! கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! . | [7] |
ஊனைப் பெருக்கி, உன்னை நினையாதொழிந்தேன், செடியேன்; உணர்வு இல்லேன்- கானக் கொன்றை கமழ மலரும் கடிநாறு உடையாய்! கச்சூராய்! மானைப் புரையும் மட மென் நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட ஆனைத்தோலாய்! ஞானக்கண்ணாய்! ஆலக்கோயில் அம்மானே! . | [8] |
காதல் செய்து, களித்து, பிதற்றி, கடிமாமலர் இட்டு உனை ஏத்தி, ஆதல் செய்யும் அடியார் இருக்க, ஐயம் கொள்வது அழகிதே! ஓதக் கண்டேன்; உன்னை மறவேன்; உமையாள் கணவா! எனை ஆள்வாய்! ஆதல் பழனக் கழனிக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!. | [9] |
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை உன்ன முன்னும் மனத்து ஆரூரன்-ஆரூரன் பேர் முடி வைத்த மன்னு புலவன், வயல் நாவலர் கோன், செஞ்சொல் நாவன், வன்தொண்டன் பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலைமேல் பயில்வாரே . | [10] |